முச்சக்கரவண்டி சாரதிகளை ஏமாற்றி பணம் பறித்த ஹனிட்ராப் குழுவை பாணந்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
33 வயதான கணவரும், 31 வயதான மனைவியுமே கைதாகியுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் வாடகை பயணம் செய்வதாக ஏறி, சாரதிகளுக்கு காமவலை விரித்து, உடலுறவுக்காக வனாந்தரமான இடங்களுக்கு அழைத்துச் செல்வது மனைவியின் கடமை. அங்கு மறைந்திருந்து, சாரதியை தாக்கி பணம் பறிப்பது கணவனின் வேலை.
கைதான ஜோடி மொரட்டுவ எகொடௌயன பகுதியைச் சேர்ந்தவர்கள்.
பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் அதிகாலை நான்கு மணியளவில் முச்சக்கரவண்டியில் ஏறிய இளம் பெண்ணொருவர், வாடகை பயணம் செய்ய அழைத்தார். சாரதி அவரை ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடங்கினார்.
பயணத்தின் இடையில் அந்த பெண் விரித்த காம வலையில், சாரதி விழுந்தார்.
இருவரும் உல்லாசம் அனுபவிப்பதற்காக அருகிலுள்ள ஆளரவமற்ற பற்றையான பகுதிக்கு சென்றுள்ளனர். இருவரும் ஆடைகளை களைந்து உடலுறவுக்கு தயாராகி கொண்டிருந்த போது அருகில் மறைந்திருந்த கணவர் வந்து முச்சக்கர வண்டி சாரதியை தாக்கியுள்ளார். வீடியோவும் எடுத்தார்.
தனது மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டாயா என தாக்கி, இந்த விவகாரத்தை சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பி விடுவேன் என்றும், அவ்வாறு செய்யாமல் விடுவதாயின், கழுத்தில் கட்டியிருந்த இரண்டரை பவுன் தங்கச்சங்கலிலை நகையை தருமாறு மிரட்டி பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபரான தம்பதியை கைது செய்த பொலிசார், கொள்ளையடிக்கப்பட்ட நகையை மீட்டுள்ளனர்.
இதற்கு முன்பும் இதுபோன்ற புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்படும் என்றும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நடுத்தர வயதுடையவர்கள் இந்த ஜோடியால் ஏமாற்றப்பட்டிருந்தாலும், முறைப்பாடளிக்க வெட்கப்பட்டு தவிர்த்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது